Archives: ஜூன் 2022

தேவனுக்காக என் வேலையை செய்தல்

நான் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையின் கட்டுரை மிக முக்கியமானது என்று உணர்ந்ததால், பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னால் இயன்ற சிறந்த கட்டுரையை வழங்குவதில் சிரமப்பட்டேன். அவருடைய எதிர்பார்ப்பை சந்திக்க தீர்மானித்த நான், மீண்டும் மீண்டும் என்னுடைய சிந்தனைகளை மாற்றி எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் என் பிரச்சனை என்ன? இது எனக்கு சவாலான ஒரு தலைப்பா? அல்லது ஆசிரியர் என்னுடைய வார்த்தைகளை விட்டுவிட்டு, என்னை அங்கீகரிக்க வேண்டும் என்னும் தனிப்பட்ட ஆதங்கமா?

நம் வேலைப் பளுவிற்கு, பவுல் நம்பகமான ஆலோசனையைக் கொடுக்கிறார். கொலோசெய திருச்சபைக்கு எழுதிய நிருபத்தில், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாமல், தேவனுக்காக வேலை செய்ய பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார். அப்போஸ்தலர் அறிவுறுத்தியது போல, “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:23-24).

பவுலின் ஆலோசனையின் பிரகாரம், நம்முடைய பூமிக்குரிய எஜமானர்களின் பார்வையில் நாம் நல்லவர்களாய் காண்பித்துக்கொள்வதற்கு பிரயாசப்பட வேண்டாம். அவர்களை மதித்து, நம்மால் முடிந்த நன்மையான காரியங்களை அவர்களுக்கு நிச்சயமாய் செய்யலாம். ஆனால் நாம் தேவனை முன்நிறுத்தி, நம் வேலையை ஆசீர்வதிக்கும்படிக்கு அவரை சார்ந்துகொண்டால், அவர் நம் முயற்சிகளுக்கு ஒளியூட்டுவார். நம்முடைய வெகுமதி? நம் வேலை அழுத்தங்கள் எளிதாகி, நம் பணிகள் நிறைவடைகின்றன. மேலும் “சிறப்பாய் செய்தீர்கள்” என்ற பாராட்டையும் அவரிடத்திலிருந்து நாம் ஒரு நாள் கேட்க முடியும்.

பாவத்திற்கு விலகி ஓடுதல்

இந்த கோடையில் இரண்டு முறை நான் காஜர் காஸ் (கேரட் புல்) என்று சொல்லப்படும் தாவரத்தினால் ஒருவகையான பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டேன். இரண்டு முறை எங்கள் முற்றத்தில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். சிறு வெள்ளைப் பூக்களைக் கொண்ட இந்த காஜர் காஸ் செடிகள் ஓங்கி வளர்ந்திருந்ததை இரண்டு முறையும் பார்க்க நேர்ந்தது. அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அதின் அருகில் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். விரைவில், நான் தவறு செய்தேன் என்பதை உணர்ந்தேன். இந்த சிறிய பச்சை விரோதியை நான் நெருங்குவதற்கு பதிலாக, நான் எதிர் திசையில் ஓட்டமெடுத்திருக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள யோசேப்புக் கதையில், வளர்ந்து படரும் விஷ தாவரங்களைக் காட்டிலும் கொடிதான பாவத்திலிருந்து விலகியோட வேண்டியதின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். அவன் எகிப்தின் போத்திபாருடைய வீட்டில் தங்கியிருந்தபோது, போத்திபாரின் மனைவி அவனை இச்சையோடு அணுகுகிறாள். யோசேப்பு அவள் அருகாமையில் செல்ல முயலவில்லை. மாறாக, விலகியோடுகிறான்.
அவள் அவன் மீது பொய்யாகக் குற்றஞ்சாட்டி அவனை சிறையில் தள்ளினாலும், யோசேப்பு தன் வாழ்நாள் முழுவதும் சுத்தமனசாட்சியோடே இருந்தான். ஆதியாகமம் 39:21ல் நாம் பார்க்கிறபடி, “கர்த்தர் அவனோடிருந்தார்.”

தேவனிடத்திலிருந்து நம்மை விலகியோடச் செய்யும் செயல்கள் மற்றும் சூழ்நிலைகளில், பாவத்திற்கு எதிர் திசையில் நாம் ஓடுவதற்கு தேவன் நமக்கு உதவிசெய்ய முடியும். 2 தீமோத்தேயு 2:22ல் பவுல், “பொல்லாத இச்சைகளை விட்டு ஓடுங்கள்” என்று எழுதுகிறார். மேலும் 1 கொரிந்தியர் 6:18ல், “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்றும் அறிவுறுத்துகிறார்.
நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விலகியோடுவதற்கு, தேவனுடைய பெலத்தை நாம் சார்ந்துகொள்வோம்.

தேவ சிநேகிதர்களின் சிநேகிதன்

இரண்டு நண்பர்களுக்கு பொதுவான இன்னொரு நண்பர் இருப்பதைக் கண்டறியும் போது, முதல் அறிமுகங்களில் சுவாரஸ்யமான அனுபவம் ஏற்படுவது இயல்பு. அதே போன்று, “உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. விஜயின் அல்லது ஹீனாவின் நண்பர்கள், எனக்கும் நண்பர்தான்" என்று நாம் சிநேகிதர்களின் சிநேகிதர்களை பெரிய மனதுடன் நம்முடைய வீட்டின் விருந்திற்கு வரவேற்கிறோம்.

இயேசுவும் இதே போன்று சொல்லியிருக்கிறார். அவர் பலரை வியாதியிலிருந்து குணமாக்கி, மக்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில், தங்களின் செல்வாக்கை தவறாய் பயன்படுத்தி, ஆலயத்தை வணிகமயமாக்கும் மதத் தலைவர்களின் செயல்களுக்கு ஒத்துப்போகாததால், அவர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இந்த எதிர்ப்புகளின் மத்தியிலும், அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி, செலவு மற்றும் ஆச்சரியத்தை பெருக்க தீர்மானித்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு வியாதியை குணமாக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கிக்க அவர்களை அனுப்புகிறார். “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்” (10:40) என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.

வாழ்க்கையை மாற்றும் ஒரு அழகான நட்பிற்கு இதை விட ஒரு நல்ல எடுத்துக்காட்டை கற்பனை செய்வது கடினம். சீஷர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்துகொடுக்கும் எவருக்கும், அல்லது அவர்களில் ஒருவருக்கு ஒரு கலசம் தண்ணீரைக் கொடுக்கும் எவருக்கும், இயேசு தேவனின் இருதயத்தில் ஒரு இடத்தை வாக்கு செய்கிறார். அந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறினாலும், சிறியதோ அல்லது பெரியதோ, ஒரு தயவுள்ள விருந்தோம்பல் செய்கையானது இன்றும் தேவனுடைய சிநேகிதர்களின் சிநேகிதனாய் நம்மை மாற்றுகிறது.

தேவனின் நிறைவான ஆசீர்வாதம்

திருச்சபையின் பலசரக்கு வாகனத்திலிருந்து மளிகைப் பொருட்களை இறக்க உதவுவதற்காக மூன்று வயது சிறுவனும் அவனது அம்மாவும் ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்குச் சென்றனர். பலசரக்கு வாகனம் பழுதாகிவிட்டது என்று அவனது அம்மா, பாட்டியிடம் கூறுவதை சிறுவன் கேட்டான். “ஐயோ, அவர்கள் இனி எப்படி பலசரக்குக் கொண்டு வருவார்கள்?” என்று சிறுவன் கேட்க, ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கு திருச்சபை பணம் திரட்ட வேண்டும் என்று அவனுடைய அம்மா விளக்கினார். சிறுவன் சிரித்தான். “என்னிடம் பணம் இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். வண்ணமயமான ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு நாணயங்களால் நிறைந்திருந்த பிளாஸ்டிக் ஜாடியுடன் அவன் திரும்பி வந்தான். அதில் தோராயமாக 2500 ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுவனிடம் அதிகம் இல்லையென்றாலும், திருச்சபையின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும்பொருட்டு, திருச்சபையின் புதிய குளிர்பதன வாகனத்தை வாங்குவதற்கு தேவன் அந்த பணத்தையும் மற்றவர்களுடைய ஊக்கமான காணிக்கைகளோடு சேர்த்துக்கொண்டார்.

உற்சாகமாய் கொடுக்கப்படுகிற சிறிய தொகையானது, தேவனுடைய கரத்தில் வைக்கப்படும்போது, எப்போதும் தேவைக்கு அதிகமானதாய் மாறுகிறது. 2 இராஜாக்கள் 4 இல், ஒரு ஏழை விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் பொருளாதார உதவி கேட்கிறார். அவளிடம் என்ன இருக்கிறது என்று எலிசா தெரிந்துகொண்டு, அவளது அண்டை வீட்டாரிடத்திலிருக்கும் பாத்திரங்களை வாங்கி வரும்படி சொல்லுகிறார் (வச. 1-4). அவள் சேகரித்த ஜாடிகளில் அவளிடமிருந்த எண்ணெயை கொஞ்சமாய் வார்க்க, தேவன் அவள் வீட்டிலிருந்த அனைத்து பாத்திரங்களையும் எண்ணெயால் நிரப்புகிறார் (வச. 5-6). எலிசா அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்” (வச. 7).

நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்தும்போது, நம்மிடம் இருப்பதைக் கொண்டு தேவன் செய்யும் பெரிய காரியங்களை நாம் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நல்ல பிரியாணி

வர்ஷாவின் உணவுக் கடையில் அதிகம் விற்பனையாகும் உணவு அவரது பிரியாணிதான். அவள் வெங்காயத்தை பொன் நிறமாக மாறும் வரை கவனமாக வறுத்தெடுப்பாள். எனவே, வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர், “உங்கள் பிரியாணி சுவை வித்தியாசமானது. சுவை மேம்பட்டதாக தெரியவில்லை” என்றார்.

வர்ஷாவின் புதிய உதவியாளர், இந்த முறை அதைத் தயாரித்து, அது ஏன் வித்தியாசமானது என்பதை விளக்கினார்: “வழக்கமான முறையில் நான் வெங்காயத்தை வறுக்கவில்லை, ஏனென்றால் நான் அதை வீட்டில் அவ்வாறு செய்வது வழக்கம். மிளகாய் தூளும் அதிகம் சேர்த்தேன். என் கருத்துப்படி, அது நன்றாக சுவைக்கிறது.” செய்முறை வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதை தன்னுடைய பாணியில் அவள் செய்து காண்பித்தாள்.

நான் சில சமயங்களில் தேவனுடைய ஆலோசனைகளுக்கு இப்படித்தான் பதிலளிப்பேன். வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, நான் என் கருத்துக்களுக்கு உட்பட்டு என் வழியில் செல்கிறேன்.

சீரிய இராணுவத்தின் படைத்தளபதியான நாகமானும் இதேபோன்ற தவறை செய்யும் விளிம்பில் இருந்தான். தன் தொழுநோய் குணமாக யோர்தானில் தன்னைக் கழுவும்படி எலிசா தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய அறிவுறுத்தலைப் பெற்றபோது, பெருமிதம் கொண்ட படைவீரன் கோபமடைந்தான். தேவனுடைய கட்டளையை விட அவனது சுயகருத்து மேலானது என்று நம்பி, தனது தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான தனது சொந்த எதிர்பார்ப்புகளை அவன் பேசினான் (2 இராஜாக்கள் 5:11-12). இருப்பினும், எலிசாவின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும்படி அவனுடைய ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தினர் (வச. 13). இதன் விளைவாக, நாகமான் குணமடைந்தான்.

நாம் தேவனுடைய வழியில் விஷயங்களைச் செய்யும்போது, விவரிக்க முடியாத சமாதானத்தை அனுபவிக்கிறோம். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவருடன் இணைந்து பணியாற்றுவோம். 

.

இராஜ்ய வடிவில் பணித்தளம்

இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் இருண்ட இடங்களாக இருந்தன. இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தன. தொழிலாளர்கள் பெரும்பாலும் வறுமையில் வாழ்ந்தனர். “சேரியில் வசிக்கும் உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இலட்சியங்களை வளர்த்துக் கொள்ள முடியும்,” என்று எண்ணிய ஜார்ஜ் கேட்பரி, தனது விரிவடையும் சாக்லேட் வணிகத்திற்காக ஒரு புதிய வகையான தொழிற்சாலையை உருவாக்கினார். அது அவரது தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளித்தது. இதன் விளைவாக, முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட போர்ன்வில்லே என்ற அந்த குக்கிராமம், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் கேட்பரியின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேவாலயங்கள் என்று வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு நல்ல ஊதியமும் மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது. இவை அனைத்திற்கும் கேட்பரி கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையே காரணம்.

தேவனுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார் (மத்தேயு 6:10). காட்பரி செய்தது போல், இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் அடிப்படையில், நம்முடைய பணியிடங்கள் அன்றன்றுள்ள ஆகாரத்தை சம்பாதிக்கும் இடமாகவும் கடனாளிகளை மன்னிக்கிற இடமாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது (வச. 11-12). ஒரு வேலையாளுக்கு, “கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து” (கொலேசெயர் 3:23) வேலை செய்ய ஊக்குவிக்கிறது. முதலாளிகளாக, ஊழியர்களுக்கு “வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்ய” (4:1) ஊக்குவிக்கிறது. நமது பங்கு எதுவாக இருந்தாலும், ஊதியமாக இருந்தாலும் சரி, தன்னார்வமாக இருந்தாலும் சரி, நாம் சேவை செய்பவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதைக் குறிக்கிறது.

ஜார்ஜ் கேட்பரியைப் போலவே, தேவன் நம் சுற்றுப்புறங்களுக்கும் பணியிடங்களுக்கும் பொறுப்பாக இருந்தால், விஷயங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். ஏனெனில் அவர் இருக்கும் போது மக்கள் செழித்து வளர்கிறார்கள். 

 

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதினால் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம்.